சென்னை: நடிகர் அஜித் நடித்த திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலம் ஒருவரின் பரிதாப நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 2013ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆரம்பம்’. இந்த படத்தில் தீவிரவாத குழுவை சேர்ந்த நபர்களில் ஒருவராக நடித்தவர் சவி சிந்து. லக்னோவை பூர்வீகமாகக் கொண்ட இவர், சட்டம் படித்த நிலையில் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக நடிப்பில் தன்னுடைய கவனத்தை செலுத்த துவங்கினார். ஆனால் இவருக்கு நினைத்தது போல் பட வாய்ப்புகள் அமையவில்லை.
ஒரு கட்டத்தில் இவருடைய குடும்பத்தினரே இவரை விட்டு விலகிய நிலையில், தற்போது தன்னுடைய அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். சவி சிந்து கூறும்போது, ‘‘ஆரம்பம் படம் மட்டுமல்லாது, பல பாலிவுட் படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளேன். ஆரம்பம் படத்தில் நடித்தபோதுதான் அடையாளம் காணப்பட்டு பிரபலம் ஆனேன். அதன் மூலம்தான் இந்தி வாய்ப்புகளும் கிடைத்தது. கடும் வறுமையில் வாடுகிறேன். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வாட்ச்மேன் வேலை செய்தாலும், என்னுடைய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை’’ என்றார்.