பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் நடப்பாண்டில் மகளிர் சுயஉதவி: குழுக்களுக்கு ரூ.328 கோடி கடன்

சேலம், ஜூலை 23: பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம், நடப்பாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.328 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப் பினர் படிவத்தை பெற்று ₹110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெறலாம். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்களில் பெற்று பயனடையலாம்.

இவை தவிர கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற 34 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் உறுப்பினராக சேருவதற்கு குறைந்த பட்சம் 12 நபர்கள், அதிகபட்சம் 20 நபர்கள் இருக்கவேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரம் மேம்பாடு அடையும். அவசரக்கடன் தேவைகளை சுயமாக பூர்த்தி செய்ய முடிகிறது. கடன் தேவைகளுக்கு கந்து வட்டிக்காரர்களை சார்ந்து இருப்பது முழுமையாக தவிர்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.328 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விரைந்து கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து, நடப்பாண்டில், 3 மாதத்தில் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மூலமாக 916 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.45.33 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் திறன், விற்பனை திறன் பெற்று குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வழிவகை காண்கிறது. மகளிர் செய்த உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யும் வகைகளில் திறன் வளர்கிறது. நடப்பாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.328 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் 916 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.45.33 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனுவை சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் நடப்பாண்டில் மகளிர் சுயஉதவி: குழுக்களுக்கு ரூ.328 கோடி கடன் appeared first on Dinakaran.

Related Stories: