நரசிங்கபுரம், ஜூலை 21: கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் ராமசாமி மனைவி ராமாயி(70). நேற்று மாலை 4 மணி அளவில், வீட்டின் வெளியே ராமாயி விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், விறகு அடுப்பில் இருந்து நெருப்பு பொறி, குடிசை வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட ராமாயி, வீட்டில் இருந்து பொருட்களை எடுக்க செல்ல முயன்றபோது, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெளியே அழைத்து வந்தனர். தீயை அணைக்க முடியாததால், கெங்கவல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், நிலைய அலுவலர் (பொ) வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். ஆனால், அதற்குள் வீடு எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம் appeared first on Dinakaran.
