டூவீலர் மீது தனியார் பஸ் மோதி தம்பதி பலி

திருச்செங்கோடு, மே 24: மல்லசமுத்திரம் அருகே டிரைவர்கள் போட்டி போட்டி ஓட்டிச்சென்றதால், நிலை தடுமாறிய பஸ் ஒன்று, சாலையோரம் நின்றிருந்த டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தம்பதி பலியாகினர். கால் முறிந்த மகள், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த செம்பாம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம்(46). இவருக்கு ராஜலட்சுமி(41) என்ற மனைவியும், இருமகள்கள், ஒருமகன் உள்ளனர். மூத்தமகள் ராஜேஸ்வரிக்கு (21) திருமணமாகி விட்டது. .செம்மாம்பாளையத்தில் உள்ள சண்முகம் வீட்டிற்கு ராஜேஸ்வரி வந்துள்ளார். அப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை உறுதிசெய்து கொள்ள, சண்முகம் ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும், நேற்று முன்தினம் ஒரே பைக்கில் செம்பாம்பாளையத்தில் இருந்து, திருச்செங்கோடு சென்றனர். வட்டூர் அருகே சென்றபோது திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற இரண்டு தனியார் பஸ்கள் போட்டிபோட்டு கொண்டு முந்திச்செல்ல முயன்றுள்ளன.

இதனை சற்று தூரத்திலேயே கவனித்த சண்முகம், பைக்கை தார்சாலையை விட்டு கீழே இறக்கி மண்சாலையில் நிறுத்தினார். அப்போது ஒரு தனியார் பஸ் தாறுமாறாக வந்து சாலையோரம் மண் சாலையில் நின்றிருந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் சண்முகம், அவரது மனைவி ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் சண்முகம், ராஜலட்சுமி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ராஜேஸ்வரிக்கு காலில் காயம் ஏற்பட்டது. விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சண்முகம், அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ராஜேஸ்வரி, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்துக்கு காரணமான இரு பஸ்களையும் பறிமுதல் செய்த போலீசார், காவல் நிலையத்தில் நிறுத்தனர். தப்பியோடி தலைமறைவாக உள்ள டிரைவர்களை தேடி வருகின்றனர்.

The post டூவீலர் மீது தனியார் பஸ் மோதி தம்பதி பலி appeared first on Dinakaran.

Related Stories: