திருச்செங்கோடு, ஜூன் 11: திருச்செங்கோட்டில், முறைகேடாக இயக்கிய வாகனம் உள்பட 4 வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் திருச்செங்கோட்டில் இருந்து தேவனாங்குறிச்சி செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தகுதிச்சான்று புதுப்பிக்காத 3 வாகனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டு கார் ஒன்று வாடகை பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மேலும், வாகன சோதனையில் ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், சோதனையின்போது அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும். தகுதிச்சான்று, காப்புச்சான்று மற்றும் வாகன ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா தெரிவித்தார்.
The post திருச்செங்கோட்டில் சாலை விதிகளை மீறிய 4 வாகனங்கள் பறிமுதல் ரூ.52,000 அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.