ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர் ஷிவ்பால் சிங்கிற்கு இடைக்கால தடை: ஊக்க மருந்து டெஸ்டில் சிக்கினார்

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், ஈட்டியெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஷிவ்பால் சிங், ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டில், தோஹா நகரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஈட்டியெறிதல் வீரர் ஷிவ்பால் சிங் (29). அந்த போட்டியில் அவர், 86.23 மீட்டர் துாரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதன் பின், 2020ல், டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், தகுதிச் சுற்றோடு ஷிவ்பால் வெளியேறினார்.

இந்நிலையில், இந்தாண்டு துவக்கத்தில் நடந்த ஒரு போட்டியில் ஷிவ்பால் பங்கேற்றபோது, போட்டிக்கு முன்பாக, அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை ஷிவ்பால் உட்கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் போட்டிகளில் பங்கேற்க, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜன்சி (நடா) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டால் 8 ஆண்டுகள் வரை அவர் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஊக்க மருந்து சர்ச்சையில் 2வது முறையாக ஷிவ்பால் தற்போது சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர் ஷிவ்பால் சிங்கிற்கு இடைக்கால தடை: ஊக்க மருந்து டெஸ்டில் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: