செங்கல்பட்டு – திண்டிவனம் சாலை விரிவாக்க பணி தொடர்பான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

* முதற்கட்ட பணி ஓராண்டில் தொடக்கம்
* 2.5 ஹெக்டேர் பரப்பளவில் லாரி நிறுத்தங்கள்

சென்னை: செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்துவற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்துள்ளது. சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அதிகளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு- திண்டிவனம் இடையே நாள் ஒன்றுக்கு 65,000 கார்களுக்கு மேலாக பயணிக்கிறது. தாம்பரம்-திண்டிவனம் இடையே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான கார்கள் பயணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிக அதிகமாக இருக்கும். அதிலும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், அச்சிறுப்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

அதேபோல், செங்கல்பட்டு முதல் பரனூர் வரையில் நெடுஞ்சாலை4 வழி அகலம் மட்டுமே இருந்ததால் பரனூர் வரை விபத்துகள் ஏற்படும். பரனூர் மட்டுமின்றி அதற்கு அப்பால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 45 ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடையும் நிலையில் உள்ளதால் முற்கட்ட பணிகள் ஓராண்டில் தொடங்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் இடையே 68 கிலோ மீட்டரில் 39 கிராமங்கள் வழியாக ஜிஎஸ்டி சாலை நீள்கிறது. இதில் 30 சந்திப்புகள் உள்ளன. இதன் வழியாக நாள்தோறும் 59,657 பயணிகள் கார்களில் பயணிக்கின்றனர். இதில் குறிப்பாக புலிப்பாக்கம் சந்திப்பிலிருந்து திண்டிவனம் வரையிலான நெடுஞ்சாலையில் 33 கரும்புள்ளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதனை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து சாலவாடி வரையிலான சாலை விரிவாக்க திட்டத்திற்கான அறிக்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ரூ.2500 கோடி செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் சாலையின் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் பஞ்சாயத்துகளின் குடிநீர் குழாய்கள் மாற்றுவது பெரும் சவாலாக அமைய உள்ளது. ஏனெனில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளுக்கு அடியில் உள்ள வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும். அதேபோல் புலிப்பாக்கம் மற்றும் பழவேலி கிராமங்களின் அருகே உள்ள குன்றுகள் வெடப்படவுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 2.5 ஹெக்டேர் பரப்பளவில் லாரி நிறுத்தும் இடங்கள் மற்றும் 1.25 ஹெக்டேர் பரப்பளவில் இரண்டு ஓய்வு பகுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் வீராணம் நீர் குழாய் நெடுஞ்சாலையில் சுமார் 20 மீட்டர் வரை செல்வதால் இது மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும் மேம்பாலங்கள் மற்றும் பாலங்கள் உள்பட மொத்தம் 14 கட்டமைப்புகள் இந்த திட்டத்தின் மூலம் புனரமைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post செங்கல்பட்டு – திண்டிவனம் சாலை விரிவாக்க பணி தொடர்பான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: