ஊட்டியில் தாவரவியல் பூங்கா பெரணி இல்லம் மீண்டும் திறப்பு

*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா பெரணி இல்லம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக்குலுங்கும். மேலும், பல ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு அவைகள் அனைத்தும் கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும்.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு செல்கின்றனர். இது தவிர பூங்காவில் பல லட்சம் பெரணி செடிகள் வைக்கப்பட்டுள்ள பெரணி இல்லம் (கண்ணாடி மாளிகை) உள்ளது. மேலும், பல்லாயிரம் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை மேல் கார்டன் பகுதியில் உள்ளது. இவைகள் இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை.

பூங்காவில் உள்ள பெரணி இல்லம் மற்றும் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை இரண்டுமே வலுவிழந்து சேதம் அடைந்தன. இதன் மேற்கூரைகளில் உள்ள கண்ணாடிகள் அவ்வப்போது விழுந்து வந்தன.

சுற்றுலா பயணிகள் இந்த கண்ணாடி மாளிகைக்குள் செல்லும்போது மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் விழுந்தால் விபத்து ஏற்படும் என்ற நோக்கில் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

இந்நிலையில், இந்த கண்ணாடி மாளிகைகள் சீரமைப்பு பணிகளை தோட்டக்கலைத்துறை துவக்கியது. முதற்கட்டமாக ஊட்டி மேல் கார்டன் பகுதியில் அமைந்துள்ள கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி மாளிகையை சீரமைத்தது.

பூங்கா நுழைவுப்பகுதியில் உள்ள பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை சீரமைக்கும் பணிகள் கடந்த மார்ச் மாதம் துவக்கப்பட்டு மே மாதம் முடிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து சுற்றுலா பகுதிகள் பார்வையிட சில நாட்கள் இந்த கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டது. பின் மீண்டும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கருதி பூங்காவில் உள்ள பெரணி இல்லம் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்த நிலையில், மீண்டும் கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பெரணி இல்லத்திற்கு சென்று அங்குள்ள பெரணி செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post ஊட்டியில் தாவரவியல் பூங்கா பெரணி இல்லம் மீண்டும் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: