திருத்தணி, மே 21: திருத்தணி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 2வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருத்தணி அடுத்த கொல்லகுப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையை, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பட்டாபிராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அங்கு மதுபானங்களை கொண்டு வந்து டாஸ்மாக் ஊழியர்கள் வைத்துள்ளனர். இந்த மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபானம் வைத்துள்ள கடைமுன்பு கிராம மக்கள் ஒன்று கூடினர். தொடர்ந்து, திருத்தணி டிஎஸ்பி கந்தனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து நேற்று முன்தினம் கோரிக்கை மனு வழங்கினர். இதில், பட்டாபிராமாபுரம் கிராமத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை பெண்கள் கல்லூரிக்கு அருகில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று 2வது நாளாக பட்டாபிராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் மதுக்கடை திறக்க உள்ள கடை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் மதியரசன், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனையடுத்து பட்டாபிராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மதுக்கடை திறக்க அனுமதி இல்லை என்றும், பொதுமக்கள் தேவையின்றி போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் திருத்தணி டிஎஸ்பி கந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு 2வது நாளாக போராட்டம்: திருத்தணி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.