ஆவடி, ஜூன் 13: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் மதுவிலக்கு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு போலீசார் எல்லை பகுதிகளில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைகளில் பெயின்ட், தின்னர், டர்பன் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில், அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் எஸ்ஐக்கள் சீதாலட்சுமி, அமீர்அலி ஜின்னா மற்றும் போலீசார், ஆவடி காவல் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அம்பத்தூர் எஸ்டேட், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், காட்டூர் சிப்காட் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 55 கெமிக்கல் தொழிற்சாலைகளில் இந்த திடீர் சோதனை நடந்தது. சோதனையின் போது, கெமிக்கல் தொழிற்சாலைகள் உரிமம் பெற்று நடத்துகிறார்களா? மெத்தனால், போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது கெமிக்கல் கம்பெனி என்று பெயரில் சட்ட விரோதமாக வேறு ஏதாவது பொருட்கள் தயாரிக்கிறார்களா என சோதனை மேற்கொண்டனர்.
The post ஆவடி பகுதிகளில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு appeared first on Dinakaran.