ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு புத்தம் புது பொலிவுடன் கல்லணை

*வர்ணம் பூசும் பணி தீவிரம்

திருக்காட்டுப்பள்ளி : மேட்டூர் அணையில் வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லணையில் வர்ணம் பூசி புத்தம் புது பொலிவுக்கு ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் மொத்தம் 114 ஷட்டர்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.

மேட்டூர் அணை திறக்கப்பட, ஒரு மாத காலத்திற்கும் குறைந்த நாட்களே உள்ளதால், கல்லணைக்கு வந்து சேரும் காவிரி நீரை திறப்பதற்கு ஏதுவாக, கல்லணையில் உள்ள அணைகளின் பாலத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஷட்டர்கள் இறக்கி ஏற்றி ஆய்வு செய்தல், ஷட்டர்களில் துருப்பிடிக்காத வகையில் பெயிண்ட் அடித்தல், கிரீஸ் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், காவிரியில் தண்ணீர் வருவதற்கு முன்பாக அணை முழுவதும் செப்பனிடும் பணி, பழுதான ஷெட்டர்கள் சரி செய்யும் பணி உள்ளிட்ட பணிகள் அனைத்து முடிக்கப்படும். மேலும் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கல்லணைக்கு வந்து சேர்ந்தால், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படும்.

எனவே கல்லணையில் உள்ள சிலைகளுக்கும், புதுப்பொலிவு அளிக்கும் வகையில், வர்ணம் பூசம் பணி, பூங்காக்கள் பராமரிப்பு பணி என அனைத்து பணிகளும் முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு துரித கதியில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றனர்.

The post ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு புத்தம் புது பொலிவுடன் கல்லணை appeared first on Dinakaran.

Related Stories: