ஆலத்தூர் தாலுகா ஜமாபந்தி நிகழ்ச்சியில் 28 மனுக்களுக்கு உடனடி தீர்வு

 

பாடாலூர், மே.19: பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 1434-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 3 வது நாளாக நேற்று நடைபெற்றது. ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சொர்ணராஜ் தலைமை வகித்தார். வருவாய் தாசில்தார் முத்துக்குமரன், சமூக நலப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாக்கியராஜ், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூத்தூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம், ஆதனூர்(வடக்கு), ஆதனூர் (தெற்கு), கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு), சில்லக்குடி (வடக்கு) மற்றும் ஜெமீன்ஆத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. இதில் தீர்க்கப்படாத நீண்டகால பிரச்னைகளுக்கு மனு அளித்தால் தீர்வு காணமுடியும்.

அதன் அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவி தொகை, பட்டா மாற்றம் (முழுபுலம் உட்பிரிவு), குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டம், சாதி சான்றிதழ், இதர மனுக்கள் என மொத்தம் 34 மனுக்கள் வரை பெறப்பட்டது. இதில் 28 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 6 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், தலைமையிடத்து துணை தாசில்தார் கீதா, தேர்தல் துணை தாசில்தார் பெரியண்ணன் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலத்தூர் தாலுகா ஜமாபந்தி நிகழ்ச்சியில் 28 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: