பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும்,
சிறப்புப் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் தாலுக்கா மேலப்புலியூர் மேற்கு கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுக்கா மலையாளப்பட்டி கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், வாசுதேவன் தலைமையிலும், குன்னம் தாலுக்கா கீழப்புலியூர் தெற்கு கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலும்,
ஆலத்தூர் தாலுக்கா திம்மூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலும் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை உணவுப் பொருள் வழங்கல் குறித்த பொதுமக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.