திருத்தணி, மே 17: திண்டிவனம்-நகரி அகல ரயில் பாதை திட்டப் பணிகளுக்காக நீர்ப்பிடிப்பு கால்வாய் மண் கொட்டி மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கடந்த காலங்களில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டங்களில் வழங்கிய மனுக்கள் மீது தீர்வு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால், கூட்டம் தொடங்கியதும் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம்-நகரி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ரயில் திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில், தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருவதாகவும், அனைத்து ஆவணங்களை சமர்ப்பித்தும் பயனாளிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சி.பெருமாள் குற்றம் சாட்டினார்.
ரயில் பாதை பணிகளுக்காக பாண்டறவேடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான எரி மற்றும் அப்பகுதியில் நந்தி மடுகு நீர்பிடிப்பு பகுதியில் மண் கொட்டி மூடப்படுவதால், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பாசன வசதி பெற முடியாத நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஏரியின் மீது உயர்மட்ட பாலம் அமைத்து ரயில் பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும், நீர்பிடிப்பு பகுதி அடைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோட்டாட்சியரை கேட்டு கொண்டனர்.
சித்தூர்-தச்சூர் இடையில் 6 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புண்ணியம் பகுதியில் விவசாயிகள் நிலங்களுக்கு சென்று வர அணுகுசாலை அமைக்க வேண்டும் என்று ஜெயச்சந்திரன் என்ற விவசாயி வலியுறுத்தினார். பட்டுராசு சமுதாய மக்களுக்கு தமிழக அரசின் அரசாணை பின்பற்றி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால் ராஜு கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்காமல் உடனடியாக ஜாதி சான்று வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார்.
ஊராட்சி நிதி வீணாவதை தடுக்க கிராமங்களில் கூடுதலாக பணியாற்றி வரும் பம்ப் ஆபரேட்டர்கள் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வதின் மூலம் ஊராட்சி நிதி வீணாவதை தடுக்க வேண்டும் என்று வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் லிங்கமூர்த்தி கேட்டு கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன், வேளாண்மை உதவி இயக்குநர் தாமோதரன், வட்டாட்சியர்கள் பாரதி, உதயம், மலர்விழி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post திண்டிவனம்-நகரி ரயில் பாதை திட்ட பணிகளுக்காக நீர்ப்பிடிப்பு கால்வாய் மூடுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.