ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் மாதவரம் ரெட்டேரி சீரமைப்பு பணி தீவிரம்: பருவமழை காலத்துக்குள் முடிக்க திட்டம்

புழல், மே 17: மாதவரம் ரெட்டேரியை ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி கரைகள் அமைத்தல், எல்லையில் தடுப்புச் சுவர் அமைத்தல், உபரிநீர் கூடுதலாக வெளியேற்ற ரெகுலேட்டர் அமைத்தல், மண் திட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாதவரம் வட்டத்தில் உள்ள மாதவரம் ரெட்டேரியை ரூ.43.19 கோடி செலவில் தூர்வாரி கரைகள் அமைத்தல், ஏரியின் எல்லையில் தடுப்புச்சுவர் அமைத்தல், ஏரியின் உபரிநீர் கூடுதலாக வெளியேற்ற ரெகுலேட்டர் அமைத்தல், ஏரியில் மண் திட்டுகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியின் மூலம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான எம்ஜிஆர் நகர், பிஆர்எச் சாலை, சுப்ரமணியம் நகர், செக்ரட்டரியேட் காலனி உள்ளிட்ட பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் வணிக கடைகளை இடித்து அகற்றி கரைகள் அமைத்து, 2,300 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேரு நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 1,300 மீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. ஏரியின் உபரிநீர் கூடுதலாக வெளியேற்றும் வகையில் ரெகுலேட்டர் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. ஜிஎன்டி சாலையை ஒட்டி கரைகள் அமைத்து தரையில் சி.சி. பிளாக் மூலம் அலை தாங்கி ரிவெட்மெண்ட் அமைத்து, ஏரியின் தண்ணீர் பரப்பினை பார்க்கும் வகையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏரியில் உள்ள தண்ணீரை முற்றிலும் வடித்துவிட்டு, ஏரியின் மேடான பகுதியினை ஆழப்படுத்தி ஏரியின் கொள்ளளவினை உயர்த்தவும், ஏரியினை தூர்வாரி பெறப்பட்ட மண் கொண்டு ஏரியின் உள்பகுதியில் பறவைகள் மற்றும் பிற பல்லுயிர்கள் கூடுகட்டி வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் சுற்றுபுறச் சூழலை மீட்டெடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்ட 4 மண் திட்டுகள் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

ஏரியின் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த உள்ளதால், ஏரியின் தளம் பரப்பில் படிந்துள்ள பிற பயன்பாட்டுக்கு உதவாத கழிவு மண்ணை அகற்றி லாரிகள் மூலம் கொண்டுசென்று அரசு கிடங்குகள் மற்றும் செங்குன்றம் ஏரியின் கரையின் பின்பகுதி மற்றும் பிற தொடர்பான பகுதிகளில் கொட்டி சமன் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஏரியின் கரையில் நடைபாதையை சீர்செய்து தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த, ஏரியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் வரும் பருவமழை காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாதவரம் ரெட்டேரி பழைய கொள்ளளவு 32 மில்லியன் கன அடியிலிருந்து 45 மில்லியன் கன அடியாக உயர்த்தப்படும். ஏரியில் 8 லட்சத்து 18 ஆயிரம் கன மீட்டர் மண்ணை தூர்வாரி சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில், நான்கு மண் திட்டுகள் அமைக்கப்படுகிறது. ஏரியில் உள்ள 33 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரை மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் உபரிநீர் கூடுதலாக வெளியேற்ற 2 கதவுகள் கொண்ட ரெகுலேட்டர் கட்டி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் மாதவரம் ரெட்டேரி சீரமைப்பு பணி தீவிரம்: பருவமழை காலத்துக்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: