ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் கொய்மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் கோட்டை மற்றும் படகு ஆகியவைகள் அமைக்கப்படவுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மலர் கண்காட்சியை காண மட்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும், பல லட்சம் கொய்மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், இம்முறை வரும் 15ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி துவங்கி 11 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியை முன்னிட்டு தற்போது பூங்காவை பொலிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இம்முறை பல லட்சம் கொய் மலர்கள் மற்றும் ரோஜா மலர்களை தாவரவியல் பூங்காவில் பொன்னியின் செல்வன் கோட்டை அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், படகு மற்றும் தர்பார் போன்றவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சிக்கு 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது அலங்கார பணிகளுக்கான மாதிரிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர கொய் மலர்கள் மற்றும் ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது. நாளை காலை முதல், இந்த மாதிரி வடிவங்களில் மலர்களை கொண்டு அலங்கார பணிகளும், மாடங்களில் தொட்டிகள் கொண்டு அலங்காரம் மேற்கொள்ளும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
The post தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியில் ‘பொன்னியின் செல்வன்’ கோட்டை படகு அலங்கார பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.