நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை: ஏற்கனவே 3 முறை முயன்று தப்பியவர்

சேலம்: சேலத்தில் நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நரசோதிப்பட்டி ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ரஞ்சன். டிங்கரிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி யோகலட்சுமி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஆர்ஐயாக வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் கவுதம் (20). இவர் கடந்த 2023ல் பிளஸ் 2 முடித்தவுடன் நீட் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெறவில்லை. 2வதாகவும் நீட் தேர்வு எழுதினார். அதிலும் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

இதையடுத்து அவரை பெற்றோர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து கவுதம் மீண்டும் படித்து 3வது முறையாக தற்போது நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் அவர் திடீரென தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின்பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவர் கவுதம், ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றதும் அவரை 3 முறையும் பெற்றோர் காப்பாற்றியதும் தெரியவந்தது. 4வது முறை பெற்றோர் பார்க்காததால் அவர் உயிரிழந்துள்ளார்.

The post நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை: ஏற்கனவே 3 முறை முயன்று தப்பியவர் appeared first on Dinakaran.

Related Stories: