மதுரை அருகே கனமழை: வீட்டில் சன் ஷேடு இடிந்து விழுந்து பாட்டி, பேரன் உள்பட 3 பேர் பலி


அவனியாபுரம்: மதுரை, அவனியாபுரம் அருகே வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் வீரமணி (10). ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள பாட்டி அம்மாபிள்ளை (65) வீட்டுக்கு வந்திருந்தார். வலையங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது அம்மாபிள்ளை தனது வீட்டின் முன்புறம் சன் ஷேடின் கீழ் பகுதியில் பேரன் வீரமணி, பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கட்டம்மா (55) ஆகியோருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் சன் ஷேடு இடிந்து அவர்கள் மேல் விழுந்தது. இதில் மூவரும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வலையங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவே வெங்கட்டம்மா உயிரிழந்தார். அம்மாபிள்ளை, வீரமணி ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் பாட்டியும், பேரனும் நேற்று காலை உயிரிழந்தனர். இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்கு வீட்டின் சன் ஷேடு இடிந்து பாட்டி, பேரன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரை அருகே கனமழை: வீட்டில் சன் ஷேடு இடிந்து விழுந்து பாட்டி, பேரன் உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: