சென்னை: தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ப்பு, ஆடைவடிவமைப்பு, தேசிய தொழில்நுட்ப கழகம் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ்நாடு திரும்ப இயலாமல் இருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்துவர குடும்பத்தினரிடம் இருந்தும், மாணவர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டது.
சென்னை அயலகத் தமிழர் நல ஆணையரகத்தில் 24/7 தொலைபேசி மையம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் மீட்பு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அயலகத் தமிழர் நலத்துறையுடன் இணைந்து, தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். மேலும், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியின் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயர்கல்வி பயின்ற 242 மாணவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லம் மூலம் விமானம் மற்றும் ரயில் வாயிலாக தமிழ்நாடு வந்தடைந்தனர். இதையடுத்து, அவர்களது சொந்த ஊர்களுக்கு, அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பாக தமிழ்நாடு வந்தடைந்த அந்த மாணவ, மாணவிகள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அரசு எடுத்த உடனடி நடவடிக்கையை பாராட்டி தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அப்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post பாதுகாப்பாக தமிழகம் வர நடவடிக்கை; ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் பயின்ற மாணவர்கள் முதல்வருடன் சந்திப்பு: அரசுக்கு பாராட்டு appeared first on Dinakaran.