அதன் தொடர்ச்சியாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள கால்வாயில் ஆகாயத்தாமரையை அகற்றும் பணி, டெமல்லஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, ஓட்டேரி நல்லா கால்வாயை மேம்படுத்தும் பணி மற்றும் ஓட்டேரி மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சி வால்டாக்ஸ் சாலை, கல்யாணபுரம் பகுதியில் நீர்வளத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 17.3 கி.மீ நீளம் கொண்ட பக்கிங்காம் கால்வாயில் ரோபோட்டிக் எக்ஸ்வேட்டர் வாகனம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, திரு.வி.க. நகர் மண்டலம், டெமல்லஸ் சாலைப் பகுதியில் 17.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த மழைநீர் வடிகாலானது, முனுசாமி கால்வாயில் இருந்து பக்கிங்காம் கால்வாயினை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வார்டு 73, 76 மற்றும் 77-க்கு உட்பட்ட அங்காளம்மன் கோவில் தெரு, ராஜா தோட்டம் பழைய ஆடு தொட்டி சாலை, கே.எம். கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும்.
தொடர்ந்து, திரு.வி.க. நகர் மண்டலம், ஓட்டேரியில் 10.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொன்றும் 3.3 மீ அகலமும் 1.7 மீ உயரமும் கொண்ட இரண்டு நீர் போக்கு வழி பகுதிகள் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஒரு நீர்போக்கு வழி பகுதி தற்காலிகமாக அடைக்கப்பட்டு, மற்றொரு நீர்போக்கு வழி பகுதியில் மழைநீர் தடையில்லாமல் வெளியேற வகை செய்யப்பட்டுள்ளது.
பருவ மழை தொடங்கும் முன்னர் இரு நீர்போக்கு வழி பகுதியிலும் மழைநீர் வெளியேறும் வகையில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓட்டேரி மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அனைத்து வெள்ளத் தடுப்பு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு அப்பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) வ.சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.