சிவகங்கை அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் நசுங்கி சாவு: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த பயங்கர விபத்தில் 5 தொழிலாளர்கள் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எம்.சாண்ட், பி.சாண்ட், கிராவல் தூசி, ஜல்லி கற்கள், உடைகற்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இக்குவாரியில் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மல்லாக்கோட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இங்கு சுமார் 47 மீட்டர் ஆழமுள்ள பகுதியில் வெடி வைக்கும் பணியில் 18க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். நேற்றும் இங்கு தொழிலாளர்கள் பணியைத் தொடர்ந்தனர். காலை 9 மணியளவில் குவாரியின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சத்தம் கேட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு ராட்சத பாறைகள் சரிந்து கிடந்தன. ஒரு பொக்லைன் இயந்திரத்தின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்திருந்தன. மேலும் கற்குவியல்கள் சரிந்து, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பாறை இடுக்குகளில் சிக்கிக் கிடந்தனர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பத்தூர், சிங்கம்புணரி, மேலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கற்குவியலுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மதுரை மாவட்டம் குழிச்சேவல்பட்டி கணேஷ் (45), ஒடிசாவை சேர்ந்த பொக்லைன் டிரைவர் அர்ஜித் (28), இ.மலம்பட்டி ஆண்டிச்சாமி (52) ஆகியோர் பாறை இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்தனர். மதுரை மாவட்டம், இ.மலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (50), ஓடப்பட்டியை சேர்ந்த முருகானந்தம் (52), தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் (47) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஆறுமுகம், முருகானந்தம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்த கணேஷ், ஆண்டிச்சாமி ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் ராட்சத பாறைக்கு கீழே பொக்லைன் இயந்திரத்திற்குள் சிக்கி கிடந்த அர்ஜித் உடலை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், எஸ்பி ஆசிஷ்ராவத் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

விபத்து குறித்து மல்லாக்கோட்டை விஏஓ பாலமுருகன் எஸ்எஸ்.கோட்டை போலீசில் புகார் செய்தார். குவாரி உரிமையாளர் மேகவர்மன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல் குவாரியில் ராட்சதப் பாறை சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோர விபத்து நடந்து எப்படி? கல் குவாரியில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று 18 பேர் பணியில் இருந்தனர். இதில் வெடி வைப்பதற்காக துளை போடும் பணியில் 8 பேர் ஈடுபட்டனர்.

துளை போடும் இயந்திரத்தின் அதிர்வு அதிகமாக இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதி முழுவதுமாக தண்ணீர் தேங்கி இருந்தது. இதனாலேயே பாறைகள் மற்றும் கற்கள் சரிந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அதிலும் பெரிய அளவிலான பாறை பொக்லைன் டிரைவர் அர்ஜித் மீது விழுந்ததில், பாறையின் அடியில் உடல் சிக்கியது. இந்த குவாரி திறக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதில் பணி செய்பவர்கள் அனைவருமே குவாரி திறக்கப்பட்ட காலத்தில் இருந்து இங்கு வேலை பார்த்து வருகின்றனர்.

* குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிங்கம்புணரி மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரியில் நேற்று எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் அங்கு பணி செய்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசாவை சேர்ந்த அர்ஜித் ஆகிய 5 பேர் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அமைச்சரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினேன்.
இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெறுபவருக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சிவகங்கை அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் நசுங்கி சாவு: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: