சென்னை பஸ்சில் வாலிபரிடம் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கடலூர்: பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு ஏட்டு தேவேந்திரன், கடலூர் ஆயுதப்படை காவலர் அசோக் குமார் ஆகியோர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடி சென்ற ஒரு தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ஒரு வாலிபர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதற்குரிய ஆவணங்கள் எதுவும் வாலிபரிடம் இல்லை. இதையடுத்து போலீசார் அவரை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் சென்னையை சேர்ந்த முகமது மிதார் மகன் நவீத் அன்வர் (26) என்பதும் அவர் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதுபோல அவர் பலமுறை ஹவாலா பணம் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பணத்தை வருமான வரி துறையிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

The post சென்னை பஸ்சில் வாலிபரிடம் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: