சேலத்தில் பட்டப்பகலில் தம்பதி அடித்துக்கொலை: நகைக்காக நடந்ததா?

சேலம்: சேலம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாப்பாளையம் எட்டிகுட்டை தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (70). இவரது மனைவி வித்யா (65). வீட்டு முன் மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராமநாதன் (எ) தினேஷ் மற்றும் வாசுதேவன் (எ) ஆனந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர். மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மூத்த மகன் ராமநாதன், மனைவி, குழந்தைகளுடன் தர்மன் நகரில் தனியாக வசித்து வருகிறார். பால் வியாபாரம் செய்யும் இளைய மகன் வாசுதேவன், மனைவி மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

பாஸ்கரன் நேற்று முன்தினம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து குடும்பத்தினருடன், இன்று (12ம் தேதி) பழநி கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே, நேற்று மாலை மாடியிலிருந்த வாசுதேவன், பால் வியாபார கலெக்சனுக்காக கீழே வந்தார். அப்போது வீட்டிற்குள் வித்யா கொலை செய்யப்பட்டும், பாஸ்கரன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டும் கிடந்தனர். உடனடியாக பாஸ்கரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், கடப்பாரை, சம்மட்டி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், தம்பதியின் தலையில் அடித்து படுகொலை செய்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு நேரில் வந்து விசாரித்தார். மோப்பநாய் லில்லி சுமார் 100 மீட்டர் தூரம் வரை சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கே திரும்பி வந்தது. கொலை குறித்து பாஸ்கரனின் மூத்த மகன் ராமநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பெற்றோருக்கு எந்தவித முன்விரோதமும் இல்லை. சொத்து பிரச்னையும் எதுவும் இல்லை. அவர்கள் அணிந்திருந்த நகைகள் மாயமாகியுள்ளது. இதனால் நகைக்காக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது’ என்றார்.

சாப்பிடும் போதே அடித்துக் கொன்ற கும்பல்
பாஸ்கரன், வித்யா ஆகிய இருவரும் பெரும்பாலான சமயங்களில் மளிகை கடையில் இருந்துள்ளனர். ஒருசில நாட்களில் மதிய உணவுக்காக கடையை சாத்தி விட்டு செல்வது வழக்கம். நேற்று மதிய உணவை முடித்து விட்டு, சுமார் 3 மணிக்கு மேல் பாஸ்கரன் கடையில் இருந்துள்ளார். அதன் பிறகு, வித்யா தனியாக சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க சென்றபோது பாஸ்கரனையும் தாக்கி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. உயிரிழந்த வித்யாவின் கையில், சாப்பிட்டதற்கான ஈரம் கூட காயாமல் அப்படியே இருந்தது.

The post சேலத்தில் பட்டப்பகலில் தம்பதி அடித்துக்கொலை: நகைக்காக நடந்ததா? appeared first on Dinakaran.

Related Stories: