திருவண்ணாமலை, மார்ச் 15: திருவண்ணாமலையில் நேற்று 2வது நாளாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். சுமார் 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசித்தனர். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பல லட்சம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று சுவாமியை தரிசிக்கின்றனர். இதேபோல் மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் காலை 11.40 மணி முதல் நேற்று பகல் 12.57 மணி வரை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மாலை 4 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.
கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்கு பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள், விடியவிடிய கிரிவலம் சென்றனர். 2வது நாளாக நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் சுவாமியை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர். கிரிவலம் முடித்த பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் சென்றனர். மேலும் பல பக்தர்கள் ரயில்களில் செல்ல திரண்டனர். அதிகளவு பக்தர்கள் திரண்டதால் ரயிலில் ஏற தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
The post திருவண்ணாமலையில் 2வது நாளாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.