மாசி மாத பவுர்ணமியில் சக்தி கயிறு கட்டி பர்வதமலை ஏறிய ஏராளமான பக்தர்கள் ‘நமச்சிவாய’ முழக்கத்துடன் சுவாமி தரிசனம்

கலசபாக்கம், மார்ச் 14: மாசி மாத பவுர்ணமியில் சக்தி கயிறு கட்டி ஏராளமான பக்தர்கள் பர்வதமலை ஏறினர். பின்னர் ‘ஓம் நமச்சிவாய பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தென் கைலாயம் என அழைக்கப்படும் 4560 அடி உயரமுள்ள பர்வதமலை கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பக்தர்கள் கொண்டு வரும் அபிஷேக பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம்.

குறிப்பாக பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வருகை தந்து மலை ஏறி சென்று வழிபடுவது வழக்கம். சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் இன்றும் காட்சி தரும் பர்வத மலைக்கு மாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர் மலை அடிவாரத்தில் பக்தர்களை வனத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர்.

படிக்கட்டுகள் செங்குத்தான கடப்பாரை படி பாறைகள், ஆகாய படி, ஏணி படி என பல்வேறு பாதைகளை கடந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட பக்தர்களின் கைகளில் மலை அடிவாரத்தில் வீரபத்திரன் கோயிலில் சக்தி கயிறு கட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். நேற்று வியாழன் மலையேறி சென்று வழிபட்டால் மிகுந்த சந்தோஷமும், இன்று புத்திர பாக்கியம் செல்வம் செழிக்கும் என்பதால் இரண்டு நாட்களாக தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலை ஏறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

The post மாசி மாத பவுர்ணமியில் சக்தி கயிறு கட்டி பர்வதமலை ஏறிய ஏராளமான பக்தர்கள் ‘நமச்சிவாய’ முழக்கத்துடன் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: