ரைஸ்மில் ஊழியர் வீட்டில் 30 சவரன், வெள்ளி, ரூ.60 ஆயிரம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை ஆரணியில் நள்ளிரவு இரும்பு கேட் உடைத்து துணிகரம்

ஆரணி, மார்ச் 15: ஆரணியில் ரைஸ்மில் ஊழியர் வீட்டில் இரும்பு கேட் உடைத்து 30 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ.60 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இபி நகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ்(36). இவர் அங்குள்ள ரைஸ் மில்லில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றார். கிரிவலம் முடிந்து நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 4 அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஒரு அறையில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது.

அதில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் எஸ்ஐ அருண்குமார், தனிப்பிரிவு காவலர் ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்கராஜ் மனைவி பாஞ்சாலி கொடுத்த புகாரின்பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு, அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். கிரிவலத்திற்கு சென்ற ரைஸ்மில் ஊழியர் வீட்டில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ரைஸ்மில் ஊழியர் வீட்டில் 30 சவரன், வெள்ளி, ரூ.60 ஆயிரம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை ஆரணியில் நள்ளிரவு இரும்பு கேட் உடைத்து துணிகரம் appeared first on Dinakaran.

Related Stories: