கோவை, ஜூன் 22: கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் தனி தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை நகரின் தெற்கு தாலுகா எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டால் அந்த அரிசி பறிமுதல் செய்து இந்த குடிமை பொருள் தனி தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டு, பின்னர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கடத்தல் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் ரேஷன் அரிசி முறையாக ஒப்படைக்கப்படுவதில்லை. தாசில்தார் அலுவலகத்தில் கழிவறையை ஒட்டிய இடங்களில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்படுகிறது. குப்பையோடு குப்பையாக கழிவுகளுடன் இந்த அரிசி மூட்டை வைக்கப்படுகிறது. பூச்சி, வண்டுகளுடன் கிடப்பதால் ரேஷன் அரிசி துர்நாற்றத்துடன் கிடக்கிறது. பயன்படுத்த முடியாத நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு இந்த அரிசி மூட்டை ஒப்படைக்கப்படுகிறது.
