சூலூர்,ஆக.3: கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கத்துரை பகுதியில் கட்டிட வேலை செய்பவர்களுக்கு சம்பளத்துடன் கஞ்சாவும் சப்ளை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் எஸ்ஐ யுவராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்தவர்கள் கஞ்சா போதையில் வேலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது மேஸ்திரிகளான பீகாரைச் சேர்ந்த முகமத் இசான் (42), பாலுசகானி (32) ஆகியோர் பீகாரில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் கட்டிட மேஸ்திரிகளாக இருந்ததால் கஞ்சா விற்பனை செய்வது வெளியில் தெரியாமல் இருந்து வந்துள்ளது. அவர்களிடம் வேலைக்கு வருபவர்களுக்கு சம்பளத்துடன் கஞ்சாவும் கொடுத்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து முகமது இஷான் மற்றும் பாலிசகானி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
