சூலூர், ஜூலை 31: கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் மாயமான 10ம் வகுப்பு மாணவியை கரூரில் மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் மகள் 15 வயது சிறுமி. இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கண்ணம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று படித்து வருகிறார். நேற்றும் வழக்கம்போல பள்ளிக்கு சிறுமி சென்றுள்ளார். பள்ளி முடிந்தது மாலை வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி சிறுமியின் டிபன் பாக்ஸ் மட்டும் வீட்டு வாசலில் இருந்த நிலையில் பள்ளி புத்தகப்பையுடன் சிறுமி மாயமானார்.
இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தகவல் அறிந்த சூலூர் எம்எல்ஏ சுகுமார் சிறுமியின் உறவினர் வீட்டுக்கு வந்து, நடந்த சம்பவங்கள் தொடர்பாக கேட்டறிந்தார். இந்நிலையில் நேற்று இரவு கரூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் போலீசார் விசாரணையில், உறவினர் வீட்டில் இருந்து பெற்றோரை பார்க்க சிறுமி பேருந்தில் சென்றதும், போலீசார் மீட்டதும் தெரிய வந்தது. இதற்கிடையில் சிறுமி காணாமல் போன சம்பவம் குறித்து தகவல் பரவியதால் சூலூர் பகுதி பொது மக்கள் பரபரப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
