மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது வழக்கு

 

கோவை, ஆக. 4: கோவை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறைந்ததாக போலீசார் தெரிவித்தனர். கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சட்டம் – ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் கடந்த ஜூலை 26-ம் தேதி (ஞாயிறு) முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி (ஞாயிறு) வரை ஒரு வார காலத்தில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, மேற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் அவர்களது எல்லையில் அதிகபட்சமாக 190 வழக்குகளும், கிழக்கு எல்லையில் 119 வழக்குகளும் பதிவு செய்துள்ளனர். சட்டம் – ஒழுங்கு போலீசாரை பொருத்தவரை சரவணம்பட்டி போலீசார் 47 வழக்குகளும், சுந்தராபுரம் போலீசார் 38 வழக்குகளும், ராமநாதபுரம் போலீசார் 36 வழக்குகளும், காட்டூர் போலீசார் 34 வழக்குகளும், துடியலூர் மற்றும் குனியமுத்தூர் போலீசார் தலா 33 வழக்குகளும், ரேஸ்கோர்ஸ் போலீசார் 31 வழக்குகளும், ரத்தினபுரி, கவுண்டம்பாளையம், செல்வபுரம் போலீசார் தலா 28 வழக்குகளும், ஆர்.எஸ்.புரம் போலீசார் 27 வழக்குகளும், உக்கடம் போலீசார் 26 வழக்குகளும் சாய்பாபா காலனி, போத்தனூர், சிங்காநல்லூர் போலீசாரும் தலா 24 வழக்குகளும், வெரைட்டி ஹால் ரோடு போலீசார் 22 வழக்குகளும், வடவள்ளி போலீசார் 18 வழக்குகளும், பீளமேடு போலீசார் 17 வழக்குகளும், பெரியக்கடை, கரும்புக்கடை போலீசார் தலா 14 வழக்குகளும் என கோவை மாநகர் முழுவதும் மொத்தம் 855 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து துணை கமிஷனர் மகேஸ்வரன் கூறியதாவது: போக்குவரத்து போலீசார் போக்குவரத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்காணித்து வருகிறோம். அதே நேரத்தில் விபத்துக்களை குறைக்க, விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. அதில், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதும் விபத்திற்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது. இதனால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க வாகன தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை 5600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை 6272 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இது கடந்த ஆண்டை விட அதிகம்.

இதற்கிடையே கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை ஒரு வாரத்தில் மேற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் 190 வழக்குகளும், கிழக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் 119 வழக்குகளும் என 309 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக எஸ்ஐ சிறப்பு எஸ்ஐ.,க்களுக்கு 49 பிரீத் அனலைசர் கருவி வழங்கப்பட்டுள்ளது. மதுபோதை வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தியதால் விபத்து குறைந்துள்ளது. அதேபோல அடிதடி போன்ற குற்ற வழக்குகளும் குறைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: