பெ.நா.பாளையம், ஆக.3: கோவை மாநகரில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீசாரின் நடை ரோந்து பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தினமும் மாலை வேலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டும், நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பேசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஏதாவது விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் கண்காணித்து வருகின்றனர். பஸ் நிறுத்தங்கள், அதன் அருகில் உள்ள டீ மற்றும் குளிர்பான கடைகள் முன்பு நின்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் சுப்பிரமணியம்பாளையம், ஜி.என்.மில்ஸ் பகுதி, உருமாண்டம்பாளையம், துடியலூர் பகுதி, அப்பநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் பிரிவு, தொப்பம்பட்டி பிரிவு என தினமும் போலீசார் நடை ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும்போது, ‘‘மக்களுக்கும் போலீசாரை பார்க்கும்போது ஒரு நம்பிக்கை எப்போதும் கிடைக்கும். குற்றவாளிகள் தவறுகளில் ஈடுபடும் முன்பே அதனை தடுக்க வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார் நடமாட்டம் அதிகமாக இருப்பதை பார்த்தால் யாரும் தேவையற்ற தகராறுகளில் ஈடுபட மாட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு துடியலூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதன்மூலம் பெண்களை கேலி, கிண்டல் செய்வது, வாகனங்களில் அதி வேகமாக செல்வது, கடைகளில் தகராறுகளில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் வலுவாக குறையும். இதனால் போலீஸ், பொதுமக்களிடையே நல்ல நட்பு உருவாகும்’’ என்று தெரிவித்தனர்.
