கோவை, ஆக.1: கோவையில் தொழிலதிபருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் 2 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறையினர் சோதனை நேற்று நிறைவடைந்தது.கோவை அருகே உள்ள கோவைப்புதூர் என் பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பாலாஜி (45). இவர், ரியல் எஸ்டேட் தொழில் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில், நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு, 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகத்திற்குள் திடீரென புகுந்து சோதனை நடத்தினர். தொடர்ந்து சுங்கம் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் மதியம் 12 மணியளவில் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே, அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் இருந்து 3 பெட்டிகளை எடுத்து சென்றனர். அதில் என்ன கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
