கோவை, ஆக.4: கோவை மாவட்டத்தில் முக்கிய பாதையாக இருக்கும் இரு வழிச்சாலைகளை 4 வழிப்பாதையாக மாற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகனங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி கடந்த ஆண்டு நடந்தது. மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மாநில ரோடு, மாவட்ட ரோடு, இதர கிராம ரோடு என 202 ரோடுகளில் தினமும் இயங்கி வரும் வாகனங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விவரங்கள் அலசப்பட்டது. ஒவ்வொரு மணி நேரத்திலும் எத்தனை வாகனங்கள் சென்று வந்தது. விடுமுறை நாட்களில் இயங்கி வாகனங்கள் தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் ெதாகுக்கப்பட்டு சராசரியாக இயங்கி வாகனங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
எந்த ரோட்டில் எந்த நேரத்தில் அதிக வாகனங்கள் இயங்கியது, அதிக வாகனங்கள் இயங்கப்படும் ரோட்டில் செய்யவேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகளை விரிவாக்கம் செய்ய வேண்டியிருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக 2 வழிப்பாதைகளை 4 வழிப்பாதையாக மாற்றும் அளவிற்கு வாகன நெருக்கம் அதிகமாகி வருவதாக தெரிகிறது. இதற்கான நீண்ட கால திட்டங்களை தயாரிக்க வேண்டும். ரோடு கட்டமைப்பு சரியாக இருந்தால் தான் தொழில், வணிகம், வர்த்தகம், வியாபாரம் அதிகரிக்கும். கோவையின் கட்டமைப்பு சாலை போக்குவரத்தின் பின்னணியில் தான் இருக்கிறது.
ரோடு விரிவாக்கம் நெடுஞ்சாலைத்துறை மட்டுமின்றி உள்ளாட்சி நிர்வாகங்களின் மூலமாகவும் மேற்கொள்ள வேண்டும். பிரதான ரோடுகளை விட உள்ளாட்சி பகுதியில் உள்ள ரோடுகளில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ரோடு விரிவாக்க திட்டங்களில் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. ரோடு விரிவாக்கம், சிறு பாலம், புதிய பைபாஸ், கிராம பகுதி ரோடுகள் இணைப்பு போன்ற திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பு உருவாகியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘‘கோவை நகரில் அதிக இடங்கள் போக்குவரத்து நெரிசல் பாதிப்பில் இருக்கிறது. மக்கள் நடந்து செல்ல போதுமான பாதைகள் விடப்படவில்லை. மேலும் சைக்கிள் வழிதடங்கள் என்பதே இல்லாமல் போய் விட்டது.
நடைபாதைகள் அதிகபட்ச ஆக்கிரமிப்பில் இருக்கிறது. இந்த அம்சங்களை பூர்த்தி செய்தால் தான் ரோடு வழிதடம் சிறப்பாக இருக்கும். நகர்ப்பகுதி ரோடுகளில் அதிக பார்க்கிங் இடம் பெற்றுள்ளது. வாகனங்களை அதிகமாக நிறுத்தி விடுவதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. ரோடு விரிவாகம் செய்வதுடன், பார்க்கிங் நடைபாதை, சைக்கிள் தடம், ரோடு சந்திப்பு பகுதி போன்றவற்றை சிறப்பாக உருவாக்க வேண்டும். நகரில் மக்கள் தொகை அதிகமாகி விட்டது. இதற்கேற்ப சாலை கட்டமைப்பு தேவை. குறிப்பிட்ட சில ரோட்டை மக்கள் பிரதானமாக பயன்படுத்துகிறார்கள்.
அவினாசி ரோட்டில் மக்கள் நடமாட்டம், வாகன பெருக்கம் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து பல ரோடுகளில் பணிகள் நடக்கிறது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த ரோட்டில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இங்கே வாகன போக்குவரத்து சவாலாக இருக்கிறது. பணிகள் முடிந்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீரும் ’’ என்றனர்.
