கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகன் கொலை: தாயுடன் வாலிபர் கைது

மீரட்: கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகனை கொன்ற தாயுடன், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள பாசுமா பகுதியில் கடந்த 16ம் தேதி, குர்பிரீத் கவுர் என்ற பெண் தனது 6 வயது மகன் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். முசாபர்நகரைச் சேர்ந்த அர்பித் பராஷர் என்பவர் தனது மகனை காரில் கடத்திச் சென்றதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அர்பித் பராஷரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குர்பிரீத் கவுருக்கும் அர்பித் பராஷருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், அவர்களது தொடர்புக்கு 6 வயது சிறுவன் தடையாக இருந்ததும் தெரியவந்தது.

இதனால், சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்து, அஸ்தினாப்பூர் காட்டில் சடலத்தை மறைத்து வைத்ததாக அர்பித் ஒப்புக் கொண்டார். அவரது தகவலின்படி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.எஸ்பி (ரூரல்) அபிஜித் குமார் கூறுகையில், ‘மேற்கண்ட தொடர் விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், இந்த கொடூர கொலையில் தாய் குர்பிரீத் கவுருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, குர்பிரீத் கவுரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே அர்பித் பராஷர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கைதான குர்பிரீத் கவுர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளார்.

Related Stories: