தி ஹேக்: நான்கு நாடுகள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று நெதர்லாந்து சென்றார். இரண்டு நாள் பயணமாக அங்கு சென்ற பிரதமர் மோடி நெதர்லாந்து மன்னர் வில்லெம் அலெக்சாண்டர், ராணி மாக்சிமா ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் இரவில் நெதர்லாந்தின் பிரதமர் ராப் ஜெட்டனுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் பிரதமர் மோடி, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் முன்னிலையில் இந்தியா- நெதர்லாந்து இடையே,பாதுகாப்பு, அத்தியாவசிய கனிமங்கள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் பாதுகாப்பு உபகரணங்களை கூட்டாக உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். உலகளாவிய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு உரையாடல், ராஜதந்திரம் மற்றும் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர் என்று இரு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தியாவில், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செமிகண்டர்கள், கடல்சார் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகபடுத்துமாறு டச்சு நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
ஸ்வீடன் சென்றார் மோடி: நெதர்லாந்தில் 2 நாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நேற்று ஸ்வீடன் ெசன்றார். ஸ்வீடனில் உள்ள கோதன்பர்க் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை அந்த நாட்டின் பிரதமர் உர்ப் கிரிஸ்டர்சன் வரவேற்றார். ஸ்வீடன் பிரதமருடன் இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
