துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அணுமின் நிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் அல் தாப்ரா பகுதியில் பராக்கா அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தின் அருகே நேற்று காலை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலால் பராக்கா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது ஆலையின் உட்புறச் சுற்றுச்சுவருக்கு வெளியே உள்ள ஒரு மின்சார ஜெனரேட்டரில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், இந்த டிரோன் தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பாதுகாப்பு அளவுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது அவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இந்தத் தீ விபத்து ஆலையின் பாதுகாப்பையோ அல்லது அதன் முக்கிய அமைப்புகளின் தயார்நிலையையோ பாதிக்கவில்லை. அனைத்து நிலையங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
இது தொடர்பான வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும் அணுசக்தி ஒழுங்குமுறைக்கான கூட்டாட்சி ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகமும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இருப்பினும், அமெரிக்கக் கடற்படை முற்றுகையின் கீழ் உள்ளதும் , ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்திய நாட்களில் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதாக ஈரான் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மிக மோசமான நிலையை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அபுதாபி அணுமின் நிலையத்தில் நடந்த டிரோன் தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
