இந்தியாவின் லட்சியங்கள் அதன் எல்லைக்குள் மட்டும் அடங்கவில்லை: நெதர்லாந்தில் பிரதமர் மோடி பேச்சு

ஹேக்: ஐக்கிய அரபு எமிரேட்டில் சுற்று பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி நெதர்லாந்துக்கு சென்றார். நெதர்லாந்தின் ஹேக் நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி நேற்று பேசுகையில், ‘‘இந்தியாமுன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தின் காலக்கட்டத்தை கடந்து வருகிறது. நாட்டின் லட்சியங்கள் இனி அதன் எல்லைகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இந்தியா பெரிய கனவுகளைக் காண்கிறது என்றும், அதன் இளைஞர்கள் வானத்தை எட்ட விரும்புகிறார்கள். இன்று இந்தியா, ‘எங்களுக்கு மாற்றம் மட்டும் வேண்டாம், சிறந்ததே வேண்டும், அதிவேகமானதே வேண்டும்’ என்று கூறுகிறது. அதனால்தான் இந்தியாவில் எல்லையற்ற லட்சியங்கள் இருக்கும்போது, ​​முயற்சிகளும் எல்லையற்றதாகி வருகின்றன.

இன்றைய இந்தியா முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தின் காலக்கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.உலகில் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் வலையமைப்பை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் லட்சியங்கள் இன்று அதன் எல்லைகளுக்குள் மட்டும் அடங்கியவை அல்ல. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும், உலகளாவிய உற்பத்தி மையமாகத் திகழவும் உலகின் வளர்ச்சி இயந்திரமாகத் திகழவும் இந்தியா விரும்புகிறது’’ என்றார்.

* டச்சு அரச குடும்பத்தினரை சந்தித்தார் பிரதமர் மோடி
நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள அரச அரண்மனையில் நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமாவை சந்தித்து, டிஜிட்டல் தொழில்நுட்பம், புத்தாக்கம், நிதி தொழில்நுட்பம் மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றில் நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.

* சோழ வம்ச செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
பிரதமர் மோடி கலந்துகொண்ட ஒரு நிகழ்வில், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ வம்சத்துச் செப்பேடுகளை நெதர்லாந்து நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது. நெதர்லாந்தில் ‘லைடன் செப்பேடுகள்’ என்று அழைக்கப்படும் ஆனைமங்கலம் செப்பேடுகளை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை, இந்தியா கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த 21 செப்பேடுகளும், சோழ வம்சத்தின் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.

முதலாம் ராஜராஜ சோழரின் காலத்தைச் சேர்ந்த இந்தச் செப்பேடுகள், ஏறத்தாழ 30 கிலோகிராம் எடையுள்ளவை. இவை அனைத்தும், சோழ வம்சத்தின் அரச முத்திரையைப் பொறித்த ஒரு வெண்கல வளையத்தால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் செப்பேடுகளை ஒன்றாக இணைக்கும் வெண்கல வளையத்தில் அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழரின் அரச முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நகரமான நாகப்பட்டினம், நெதர்லாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தில், ஒரு கிறிஸ்தவ மதபோதகக் குழுவின் ஒரு பகுதியாக இந்தியாவில் பணியாற்றிய ப்ளோரென்டியஸ் கேம்பர் என்பவரால், 1700களில் நெதர்லாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

Related Stories: