இலங்கையில் நாணய மதிப்பு கடும் சரிவு எதிரொலி வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் சுங்க வரி: அதிபர் அனுர குமார திச நாயக்க அறிவிப்பு

கொழும்பு: அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை, விலை உயர்வு போன்ற நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய புவிசார் அரசியல் சூழல் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இலங்கையின் நாணய மதிப்பும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பில், “மார்ச் மாத இறுதியில் 7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இலங்கையின் வௌிநாட்டு கையிருப்பு ஏப்ரல் இறுதிக்குள் 6.76 பில்லியன் டாலராக குறைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் நீங்கலாக பிற வாகனங்கள் இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அதிபர் அனுர குமார திச நாயக்க நேற்று வௌியிட்ட அறிக்கையில், “இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரி மீது 50 சதவீத கூடுதல் வரியை விதிக்க நிதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது. புதிய திருத்தங்களின்படி இறக்குமதி செய்யப்படும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 30 சதவீத சுங்க இறக்குமதி வரியுடன், கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்பு முறை மே 16 (நேற்று) முதல் மூன்றுமாத காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: