லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 1988ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த ரீட்டா பட்லர் பாரெட் என்ற பெண்ணை, பிரபல பாப் இசை குழுவான ‘ஜாக்சன் 5’-யின் பாடகர் ஜெர்மைன் ஜாக்சன் (71) பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக மறைக்கப்பட்ட இந்த விவகாரம் குறித்து, கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2022ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரீட்டா பட்லர் பாரெட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஜெர்மைன் ஜாக்சன் எவ்வித பதிலும் அளிக்காததால், அவருக்கு எதிராக 6.5 மில்லியன் டாலர் (சுமார் 54 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்பட்ட மன உளைச்சல், உடல் ரீதியான பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்காக இந்த பெரும் தொகையை வழங்க நீதிபதி ஆணையிட்டுள்ளார். ஜாக்சன் தரப்பில் நீதிமன்ற நோட்டீஸ்களுக்கு முறையாக பதிலளிக்காததால் ஒருதலைப்பட்சமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு இசை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
