வாஷிங்டன்: கள்ளக்காதல் பிரச்னையால் பிரியவிருந்த அமெரிக்க தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழ்ந்து வரும் நெகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நடிகர் அல் ராபர்ட்சன் மற்றும் நடிகை லிசா தம்பதியினர் கடந்த 1984ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அன்னா, அலெக்ஸ் என இரண்டு மகள்கள் உள்ளனர். பில் மற்றும் கே ராபர்ட்சன் தம்பதியின் மூத்த மகனான அல் ராபர்ட்சன் மத போதகராக பணியாற்றி வந்ததால், எப்போதும் வேலை மற்றும் பயணங்களிலேயே மூழ்கி இருந்தார். இதனால் தனிமையில் வாடிய லிசா, தனது பழைய காதலருடன் மீண்டும் கள்ளத்தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து அல் ராபர்ட்சனுக்கு தெரிய வந்தபோது, அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். ஆரம்பத்தில் தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனிமேல் மனைவியை ஒருபோதும் நம்ப முடியாது என்றும் அவர் கருதினார். இருப்பினும், முறையான ஆலோசனைகள் மற்றும் இறை நம்பிக்கை மூலம் தனது தவற்றை உணர்ந்த லிசா, அல் ராபர்ட்சனிடம் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து அவரை ஏற்றுக்கொண்ட அல் ராபர்ட்சன், மீண்டும் ஒருமுறை திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டு தங்களது வாழ்க்கையை புதுப்பித்தனர்.
இந்நிலையில், இந்த கசப்பான சம்பவங்கள் குறித்து அல் ராபர்ட்சன் (61) சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘திருமண உறவில் துரோகம் நடக்கும்போது பலரும் பிரிந்து விடுகின்றனர். ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிடுவதில்லை, எதையும் பேசி சரிசெய்ய முடியும். லிசாவுக்காக போராட தயாராக இருந்தேன். ஏனெனில் ஆரம்ப காலங்களில் ஒரு கணவராக நான் பல தவறுகளை செய்துள்ளேன்’’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இவ்வாறு 40 ஆண்டுகளைக் கடந்து இந்த தம்பதி வெற்றிகரமாக வாழ்ந்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
