அபுஜா: காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்ரிக்காவில் அமைந்துள்ள காங்கோ குடியரசில் எபோலா வைரஸ் நோய் மிக தீவிரமாகப் பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தகூடும்.
கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக காங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் அங்கு அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தற்போதைய புதிய அலை பாதிப்பினால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் 300க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கோ மற்றும் உகாண்டாவில், அரிதான பண்டிபுக்யோ வைரஸ் திரிபுடன் தொடர்புடைய,அதிகரித்து வரும் எபோலா நோய்ப் பரவலே கவலைக்குரிய விஷயமாகும். எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் இந்தத் தொற்றை சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசர நிலையாகப் பிரகடனம் செய்துள்ளது.
