ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குசாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வாக்குச்சாவடி அலுவலர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி கட்ட சீரற்றமயமாக்கல் பணி நேற்று ஊட்டியில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிைல வகித்தார்.
பொது பார்வையாளர்கள் தான்வி சுந்த்ரியல், ஹரீஷ், சுஹாஸ், காவல் பார்வையாளர் லதா மனோஜ் ஆகியோர் தலைமையில் இப்பணிகள் நடைபெற்றது. ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு தலா 305 தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை 1, நிலை 2, நிலை 3 என மொத்தம் 1,220 வாக்குச்சாவடி அலுவலர்களும், கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு 286 தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள், நிலை 1, நிலை 2 மற்றும் நிலை 3 என மொத்தம் 1,144 வாக்குச்சாவடி அலுவலர்களும், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு 292 தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள், நிலை 1, நிலை 2 மற்றும் நிலை 3 என மொத்தம் 1,168 வாக்குச்சாவடி அலுவலர்களும் என மொத்தம் மூன்று தொகுதிகளில் உள்ள 736 வாக்குச்சாவடிகளுக்கு 3,532 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் வாக்குச்சாவடி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 406 காவல் அலுவலர்களுக்கும், 93 நுண் பார்வையாளர்களுக்கும் சீரற்றமயமாக்கல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் தலைமையில், நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந்நிகழ்வில், மாவட்ட எஸ். பிநிஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி உட்பட பலர் கலந்து கொணடனர்.
