ஊட்டி : வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையம் ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஊட்டி சட்டமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர்கள் தான்வி சுந்த்ரியல், கூடலூர் சட்டமன்ற தொகுதி ஹரீஷ், காவல் பார்வையாளர் லதா மனோஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உடன் இருந்தார்.
இதுகுறித்து பொது பார்வையாளர்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 108 ஊட்டி, 109 கூடலூர், 110 குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்களை, வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், வாக்கு எண்ணும் அறை, பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை உள்ளிட்டவைகளையும், அலுவலர்கள், முகவர்கள் வந்து செல்லும் பாதை மற்றும் அடிப்படை வசதிகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகநாயகி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.
