கொடைக்கானல் மலைப்பகுதியில் தடையை மீறி 12 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ள பேருந்துகள் இயக்கம்.!! பொதுமக்கள் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 14 மீட்டர் நீளமுள்ள மல்டி ஆக்ஸல் பேருந்துகளால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிரபல சுற்றுலாத்தலமாக இருக்கும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 12 மீட்டர் நீளத்திற்கும் அதிகமான பேருந்துகளை இயக்க கூடாது என்று நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து உள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது கொடைக்கானல். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள மலைப்பகுதிகளில் இயற்கை ரம்மியமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் கொடைக்கானலில் எப்போதும் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.

எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 12 மீட்டருக்கும் மேல் நீளமுள்ள பேருந்துகள் கொடைக்கானல் மலை பாதையில் செல்ல கடந்த நவம்பர் 18, 2024 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 12 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள ஆம்னி மற்றும் சரக்கு வாகனங்களுக்கு இத்தடை பொருந்தும்.

எனவே 12 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள பேருந்துகள் கொடைக்கானல் மலைப்பாதையில் செல்ல அனுமதி இல்லை. இந்த நிலையில் சுமார் 14 மீட்டர் நீளம் கொண்ட 7 கே.எஸ்.ஆர்.டி.சி மல்டி ஆக்ஸல் வால்வோ பேருந்துகள் கொடைக்கானல் மலை சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் உள்ளூர்வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: