ஓட்டு போட ஊருக்கு போகும் போதும் இப்படியா..! பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…

சென்னை: நாளை சட்டமன்ற தேர்தலை ஒட்டி, வாக்களிக்க சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்ந்துள்ளது . வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 23 தேர்தலையொட்டி அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அரசு போக்குவரத்துத் துறை சார்பில் 10,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ள போதிலும், தனியார் ஆம்னி பேருந்துகளின் முன்பதிவு அதிக கட்டணமாகி வருகிறது.

குறிப்பாக, சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து கோவைக்கு செல்ல ரூ. 3200 கட்டணம், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ரூ.2500 முதல் ரூ.3000 கூடுதல் கட்டணம். சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்ல ரூ.3500 முதல் ரூ.4000 வரை கூடுதல் கட்டணம். மற்றும் திருநெல்வேலி செல்லும் பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலிக்கு குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை பேருந்துகளில் 3,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால் நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மற்றும் மதுரை போன்ற ஊர்களுக்குச் செல்லும் குளிர்சாதனப் பேருந்துகளின் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட பல நூறு ரூபாய்கள் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை லாப நோக்கமாகக் கருதினாலும், ஜனநாயக கடமையாற்ற வாக்குகளைப் பதிவு செய்ய செல்லும் மக்கள் மீது இவ்வளவு பெரிய சுமையை ஏற்றுவது வேதனை அளிக்கிறது என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: