கோடை விடுமுறை துவங்கியதால் அமராவதி முதலை பண்ணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

உடுமலை : கோடை விடுமுறை துவங்கியதையடுத்து, அமராவதி முதலை பண்ணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் முதலை பண்ணை உள்ளது. இந்த பண்ணை 1975-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இங்கு சதுப்பு நில முதலைகள் அதிகளவில் உள்ளன. அமராவதி அணையில் இருந்து வழிதவறும் முதலைகளை பிடிக்கப்பட்டு இங்கு வளர்க்கப்படுகின்றன. முதலைகள் ஒரே நேரத்தில் 10 முதல் 60 முட்டைகள் வரை இடும்.

முதலைகளின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 50 வருடங்கள் ஆகும். அமராவதி முதலை பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அமராவதி அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தவறாமல் முதலை பண்ணையை பார்த்து செல்கின்றனர்.

குழந்தைகளுடன் சென்று முதலைகளை பார்த்து குதூகலிக்கின்றனர். தற்போது, கோடை விடுமுறை துவங்கியதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதலை பண்ணைக்கு வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து முதலை பண்ணை அதிகாரிகள் கூறுகையில், “முதலை பண்ணைக்குள் புகைபிடிக்கக்கூடாது. முதலைகள் வசிக்கும் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை போடக்கூடாது. தேவையற்ற கூச்சல் எழுப்பினால் முதலைகளுக்கு இடையூறாக அமையும்.

முதலைகளை தொடக்கூடாது. முதலைகளை பார்க்கும்போது குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் இருந்துதான் முதலைகளை பார்க்க வேண்டும். முதலை பண்ணையில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றனர்.

முதலை பண்ணையில் பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறுவர்களுக்கு 10 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் கட்டணமாக கனரக வாகனங்களுக்கு 100 ரூபாய், இலகு ரக வாகனங்களுக்கு 50 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், மொபைல் கேமராவுக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.

Related Stories: