*பெயர்ந்த இடங்களில் பேட்ச் ஒர்க் தீவிரம்
கொடைக்கானல் : கோடை சீசனுக்கு தயாராகும் வகையில் கொடைக்கானல் மலைச்சாலைகளில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலங்கள் ஆகும்.
இந்த 2 மாதங்களிலும் கொடைக்கானலில் தட்பவெட்ப நிலை சீராக இருக்கும். அதிக குளிரும் இருக்காது, அதிக வெப்பமும் இருக்காது. இந்த இதமான கால நிலையை ரசிப்பதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு இந்த 2 மாதங்களில் வந்து செல்வர். குறிப்பாக மே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும்.
தற்போது தமிழ்நாட்டில் நாளை ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரியில் விடுமுறை விட்ட போதும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து தற்போது சீராக உள்ளது.
இந்த தேர்தல் முடிந்த பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா வாகனங்கள் எண்ணிக்கை அதிகளவில் வரும் என்பதால் நெடுஞ்சாலை துறை சார்பில் கொடைக்கானலுக்கு வரும் வத்தலக்குண்டு, பழநி மலைச்சாலைகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முதல்கட்டமாக சாலையோரங்களில் அடர்ந்தும் மற்றும் சாலை வளைவுகளை மறைத்தும் வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்றினர். தொடர்ந்து சேதமடைந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இரவில் இரவில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் பாதுகாப்பாக செல்வதற்காக சாலையோர தடுப்பு சுவர்கள் அனைத்தும் வர்ணம் பூசப்பட்டும் வருகிறது. விரைவில் இப்பணிகள் அனைத்தும் முடிவடையும் என்று நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
