திருச்சி: சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் ராமதாஸ் (ஏ) கருப்பப்பாண்டி திருச்சி விமான நிலையத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லாரியை மறித்து சோதனை செய்த போது அந்த லாரியில் மொத்தம் 661 கிலோ கஞ்சாவானது பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு செய்து இதற்கு பின்புலமாக யார் யார் இருந்தனர் என்பது தொடர்பாக தீவிரமான விசாரனை மேற்கொண்டனர்.
இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய நபராக கருதப்படுபவர் ராமதாஸ் (ஏ) கருப்பப்பாண்டி, பறிமுதல் செய்யப்பட்ட 661 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது என தெரியவந்தது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் முக்கிய நபரான ராமதாஸ் (ஏ) கருப்பப்பாண்டி பல ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற நிலையில், இந்த ராமதாஸ் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக தலை மறைவாக இருந்து வந்திருக்கிறார். ராமதாஸ் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் வசமாக சிக்கினார்.
