கெங்கராம்பாளையம் முதல் எம்.எம்.குப்பம் வரை சர்வீஸ் சாலையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

*சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருபுவனை : விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. அதற்காக மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில், கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கெங்கராம்பாளையம் முதல் எம்.எம்.குப்பம் வரை சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி- விழுப்புரம் சென்று வரும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்க சர்வீஸ் சாலை வழியாக செல்வதில்லை. அதற்கு மாறாக விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையான நான்கு வழி சாலையிலேயே பயணிகளை ஏற்றுவதும், இறக்குவதும் என்ற அசாத்திய போக்கில் தற்போது பேருந்து ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் பேருந்து ஏறுவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள மேம்பாலங்கள் தொடங்கும். முடியும் இடங்களுக்கு சென்று பேருந்துகளில் ஏறி பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அதில் பேருந்து ஓட்டுநர்கள் நிறுத்தும் இடங்களில் சரியான பாதுகாப்பு இல்லாமல் விபத்து அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே புதுச்சேரி அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் பேருந்து நிறுத்தும் இடங்களை முறையாக ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் பேருந்துகளை சர்வீஸ் சாலையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அப்படியே விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலையிலே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும், இறக்குவதும் தொடர்ந்தால் அதற்கு தகுந்தார்போல், அந்த இடத்தில் உள்ள தடுப்பு வேலிகளை முழுமையாக அகற்றிவிட்டு அந்த இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் அப்பகுதியில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: