ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஒரே மதிப்பெண் முறையை பின்பற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வில் உள்ள தேர்ச்சி மதிப்பெண் நடைமுறை பல ஆண்டுகளாக தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வரும் ஆசிரியர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. 2003, 2004 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் ஆசிரியர்களாகப் பணி ஈர்ப்பு செய்யப்பட்டபோது அனைவரும் ‘பணியில் உள்ள ஒரே வகுப்பினர்’ என கருதப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வுகளில், பொதுவான ஒரே குறைந்தபட்ச மதிப்பெண் மட்டுமே தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 40 சதவீதம் (150 க்கு 60) மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் (150 க்கு 75) மதிப்பெண்களும் சிறப்புத் தளர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாநிலத்தில் உள்ள எம்.பி.சி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சிறப்பு மதிப்பெண் சலுகை அறிவிக்கப்படவில்லை. எனவே, பணியில் உள்ள ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தகுதியான 40 சதவீதம் (60 மதிப்பெண்கள்) என்பதை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும். அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் குறைத்து தனியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: